Tuesday 27 August 2013

ஆசைக்கவிதைகள் - 73

நாத்துநட போரவரே!

அந்நாளில் வள்ளியூரில் வாழ்ந்த இளைஞன் ஒருவன், முதல் நாளே பாத்திகட்டி நீர் இறைத்து நாற்று நடுவதற்காக வயலைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தான். அடுத்த நாள் காலையில் அவன் வண்டியில் போவதைக்கண்ட அவனது மாமன் மகள் ‘பாத்தியில் அவன் கட்டிவைத்த நீரெல்லாம் உடைத்துக் கொண்டு ஓடிவிட்டது என்றும், மீண்டும் அவன் நீர் இறைப்பதற்கு தான் உதவலாமா [கை கொடுக்கலாமா] எனக்கேட்கிறாள். 

அவள் தன்னைச் சீண்டவே அப்படிக் கேட்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். வயலுக்கு நீரிறைக்க [ஏற்றம்] அவள் வந்தால் தப்பு நடக்கலாம், எனவே அவளது ஏக்கத்தைப் போக்க வேறுவழி பார்க்கச் சொல்கிறான். அவன் ‘ஏற்றக் கை நீ தந்தால் ஏடாகூடமாய்விடும்’ என மிக நளினமாக தன் நிலையை விளக்குவது அன்றைய தமிழ் இளைஞரின் மேன்மையைக் காட்டுகிறது.

பெண்: வெட்டவெளி மீதினிலே
                      கட்டவண்டி கட்டிக்கிட்டு
             நட்டநடு வெயிலில
                      நாத்துநட போரவரே

பெண்: பாத்திவெள்ளம் எல்லாமே
                      பொத்துகிட்டு போயிடிச்சு
            ஏத்தமிறை கணுமே
                      ஏத்த கை நாதரவோ

ஆண்: ஏத்த கை நீதந்தால்
                      ஏடாகூடம் ஆயிடுமே
           ஏக்கத்தை போகடிக்க
                      ஏத்தவழி பாருமச்சி 
                                          - நாட்டுப்பாடல் (வள்ளியூர்)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
அந்நாளில் வள்ளியூரில் வாழ்ந்த மக்கள் கிணற்று நீரை ஏற்றத்தால் இறைத்து பயிர்செய்தனர் என்பதை இந்த நாட்டுப்பாடல் காட்டுகிறது.

No comments:

Post a Comment